கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Saturday, January 15, 2022

பத்தாம் வகுப்பு தமிழ் முதல் திருப்புதல் தேர்வு 2022 முக்கிய வினா விடைகள் TENTH TAMIL FIRST REVISION EXAM IMPORTANT QUESTIONS AND ANSWERS

 .தமிழ்த்துகள்

பத்தாம் வகுப்பு தமிழ் முதல் திருப்புதல் தேர்வு முக்கிய வினா விடைகள்

மனப்பாடப்பாடல்

அன்னை மொழியே

அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!

முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!

கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்

மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!

தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!

இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே!

மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே!

முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!          - பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

திருக்குறள்

  1. எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு.

  1. பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே

நல்லார் தொடர்கை விடல்.

  1. பண்என்னாம் பாடற் கியைபின்றேல்; கண்என்னாம்

கண்ணோட்டம் இல்லாத கண்.

  1. அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்

பெருமை முயற்சி தரும்.

  1. முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்.

 

பலவுள் தெரிக

1.’காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்’ நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது .............

அ.இலையும் சருகும்                

ஆ.தோகையும் சண்டும்             

இ.தாளும் ஓலையும்                  

ஈ.சருகும் சண்டும்

2.எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும் ........

அ.எந் + தமிழ் + நா          

ஆ.எந்த + தமிழ் + நா                 

இ.எம் + தமிழ் + நா        

ஈ.எந்தம் + தமிழ் + நா

3.’கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது’ - தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற் பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே .........

அ.பாடிய, கேட்டவர்         

ஆ.பாடல், பாடிய    

இ.கேட்டவர், பாடிய         

ஈ.பாடல், கேட்டவர்

4.வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர் வகை ........

அ.குலை வகை              

ஆ.மணி வகை               

இ.கொழுந்து வகை                  

ஈ.இலை வகை

5.உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்

உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம் - பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை ?

அ. உருவகம், எதுகை               

ஆ. மோனை, எதுகை               

இ. முரண், இயைபு

ஈ. உவமை, எதுகை.

6. பெரிய மீசை சிரித்தார் - வண்ணச் சொல்லுக்கான தொகையின் வகை எது ?

அ. பண்புத்தொகை         

ஆ. உவமைத்தொகை              

இ. அன்மொழித்தொகை 

ஈ. உம்மைத்தொகை       

7.அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது –

அ.வேற்றுமை உருபு                 

ஆ.எழுவாய்          

இ.உவம உருபு               

ஈ.உரிச்சொல்

குறுவினா 2 மதிப்பெண் வினாக்கள்

1." மன்னும் சிலம்பே மணிமே கலைவடிவே!

முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!" –

இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள ஐம்பெருங்காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக.

எஞ்சியுள்ள ஐம்பெருங்காப்பியங்கள்: 

1.சீவக சிந்தாமணி  

2.வளையாபதி                 

3.குண்டலகேசி

2. ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.

ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.

ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.

-மேற்கண்ட தொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டி,

எஞ்சிய பிழையான தொடரிலுள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக.

1). சரியான தொடர்கள்:              

ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.             

ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.

2). பிழையான தொடர்:              

ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.

3). பிழைக்கான காரணம்:

தாற்றில் தான் சீப்புகள் இருக்கும். சீப்பில் தாறுகள் இருக்காது.

3. 'வேங்கை' என்பதைத் தொடர் மொழியாகவும் பொது மொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.

வேங்கை - மரம், வேம்+கை (வேகின்ற கை)

1). தனிமொழி: 'வேங்கை' என்னும் சொல் தனியாக நின்று வேங்கை மரத்தைக் குறிப்பதால், தனிமொழியாகிறது.

2). தொடர்மொழி: 'வேங்கை' என்னும் சொல் பிரிந்து நின்று 'வேகின்ற கை' என்னும் பொருளைத் தருவதால், தொடர் மொழியாகிறது.

3). பொதுமொழி: இவ்வாறு, 'வேங்கை' எனும் சொல் தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும்

பொதுவாய் அமைந்து, பொதுமொழியாகிறது.

4. 'உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் வடுக்காண் வற்றாகும் கீழ்'

- இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி அதன் இலக்கணம் தருக.

1). உடுப்பதூஉம் உண்பதூஉம் - இன்னிசை அளபெடை            

2). இன்னிசை அளபெடை:                

செய்யுளில் ஓசை குறையாத இடத்தும் இனிய ஓசைக்காக உயிர் எழுத்துகள் அளபெடுப்பது, இன்னிசை அளபெடை.

5). "நமக்கு உயிர் காற்று 

காற்றுக்கு வரம் மரம் - மரங்களை

வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம்"- இது போன்று உலகக் காற்றுநாள் விழிப்புணர்வுக்கான

இரண்டு முழக்கத் தொடர்களை எழுதுக.

உலகக் காற்றுநாள் விழிப்புணர்வுக்கான முழக்கத்தொடர்கள்:

1). மரம் தரும் உயிர்வளி 

          மனிதர் வாழ,  மரம் வளர்ப்பதே ஒரே வழி.

2). பட்டம் கூட முட்டும்!     பாழ்படுத்தாதீர்..!

          நித்தம் மூச்சும் முட்டும்!

6). வசன கவிதை - குறிப்பு வரைக.

வசன கவிதை - உரைநடையும் கவிதையும் இணைந்து, யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் 'வசனகவிதை' எனப்படுகிறது.                             

இவ்வடிவம் பாரதியாரால் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டது.  

இவ்வசனகவிதையே 'புதுக்கவிதை' என்ற வடிவம் உருவாகக் காரணமாயிற்று.

7). தண்ணீர் குடி, தயிர்க்குடம் ஆகிய தொகைநிலைத் தொடர்களை விரித்து எழுதுக. தொடரில் அமைக்க.  

அ). தண்ணீர் குடி- தண்ணீரைக் குடி.         

தினமும் ஐந்து லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும்.

ஆ). தயிர்க்குடம் - தயிரை உடைய குடம்.     

இனியா தயிரை உடைய குடத்தை எடுத்து வந்தாள்.

8). 'எழுது என்றாள்' என்பது விரைவு காரணமாக 'எழுது எழுது என்றாள்' என அடுக்குத்தொடர் ஆனது.

'சிரித்துப் பேசினார்' என்பது எவ்வாறு அடுக்குத்தொடராகும்?

'சிரித்துப் பேசினார்' என்பது 'சிரித்துச் சிரித்துப் பேசினார்' என அடுக்குத்தொடர் ஆகும்.

9) பாரதியார் கவிஞர், நூலகம் சென்றார், அவர் யார்?ஆகிய தொடர்களில் எழுவாயுடன் தொடரும் பயனிலைகள் யாவை?

பாரதியார் கவிஞர்- பெயர்ப் பயனிலை                     

நூலகம் சென்றார்-வினைப் பயனிலை         

அவர் யார்?- வினாப் பயனிலை.

10). 'நச்சப்படாதவன்' செல்வம் - இத்தொடரில் வண்ணமிட்ட சொல்லுக்குப் பொருள் தருக.

நச்சப்படாதவன் – 

பிறருக்கு உதவி செய்யாததால், ஒருவராலும் விரும்பப்படாதவன்.

11). கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய கோடியுண் டாயினும் இல்.

- இத்திருக்குறளில் வரும் அளபெடைகளை எடுத்து எழுதுக.

கொடுப்பதூஉம், துய்ப்பதூஉம் - இன்னிசை அளபெடை

12). பொருளுக்கேற்ற அடியைப் பொருத்துக.

அ) உயிரை விடச் சிறப்பாகப் பேணி காக்கப்படும்     - ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை

ஆ) ஊரின் நடுவில் நச்சு மரம்பழுத்தது போன்றது   - உயிரினும் ஓம்பப்படும்.

இ) ஒழுக்கத்தின் வழி உயர்வு அடைவர்               - நடுஊருள் நச்சு மரம்பழுத் தற்று.

அ) உயிரை விடச் சிறப்பாகப் பேணிக் காக்கப்படும்    - உயிரினும் ஓம்பப் படும்.

ஆ) ஊரின் நடுவில் நச்சு மரம் பழுத்தது போன்றது   - நடுஊருள் நச்சு மரம்பழுத் தற்று.

இ) ஒழுக்கத்தின் வழி உயர்வு அடைவர்                  - ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை.

13). எய்துவர் எய்தாப் பழி - இக்குறளடிக்குப் பொருந்தும் வாய்பாடு எது?

அ). கூவிளம் தேமா மலர்

ஆ). கூவிளம் புளிமா நாள்

இ). தேமா புளிமா காசு    

ஈ). புளிமா தேமா பிறப்பு

விடை:         அ). கூவிளம் தேமா மலர்                                                          

மொழிபெயர்ப்பு

1                 

If you talk to a man in language he understands, that goes to his head. If you talk to him in his own language that goes to his heart. -Nelson Mandela

நீ ஒருவனிடம் அவனுக்குப் புரிந்த மொழியில் பேசினால் அது அவன் மூளைக்குச் செல்லும், நீ அவனிடம் அவனின் தாய்மொழியில் பேசினால் அது அவனின் இதயத்தை அடையும் – நெல்சன் மண்டேலா

Language is the road map of a culture. It tells you where its people come from and where they are going. – Rita Mae Brown.

மொழி ஒரு கலாச்சாரத்தின் வழிகாட்டி. அது மக்கள் எங்கிருந்து வருகிறார்கள், எங்கே போய்க்கொண்டிருக்கிறார்கள் என்பதை உனக்கு அறிவிக்கும். – மே பிரௌன் ரீட்டா

2      

The Golden sun gets up early in the morning and starts its bright rays to fade away the dark. The milky clouds start their wandering. The colorful birds start twitting their morning melodies in percussion. The cute butterflies dance around the flowers. The flowers fragrance fills the breeze. The breeze gently blows everywhere and makes everything pleasant.

பொன்னிறச் சூரியன் அதிகாலையிலேயே எழுந்து பிரகாசமான கதிர்களால் இருளை மங்கச் செய்கிறது. பால்போன்ற வெண்மேகங்கள் அலைகளாகத் தவழ்கின்றன. வண்ணமயமான பறவைகள் தங்களது காலைப்பொழுதை இசை, தாளத்துடன் தொடங்குகின்றன. அழகான பட்டாம்பூச்சிகள் மலர்களைச் சுற்றி நடனமாடுகின்றன. பூக்களின் மணம் தென்றலை நிரப்புகின்றன. காற்று மெதுவாக எல்லா இடங்களிலும் வீசி எங்கும் இனிமையான நறுமணம் பரப்பும்.                                                                  

3      

Respected ladies and gentlemen, I am Ilangovan studying tenth standard. I have come here to say a few words about our Tamil culture. Sangam literature shows that Tamils were best in culture and civilization about two thousand years ago. Tamils who have defined grammar for language have also defined grammar for life. Tamil culture is rooted in the life styles of Tamils throughout India.Srilanka, Malaysia, Singapore, England and Worldwide. Though our culture is very old, it has been updated consistently. We should feel proud about our culture. Thankyou one and all.

மதிப்பிற்குரிய கன்னியரே காளையரே நான் இளங்கோவன் பத்தாம் வகுப்பு படிக்கிறேன். நான் தமிழ்க் கலாச்சாரம் குறித்து சில வார்த்தைகள் கூற இங்கு வந்துள்ளேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களின் கலாச்சாரம் நாகரிதம் சிறப்பாக இருந்ததைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. தமிழர்கள் மொழிக்கு இலக்கணம் வகுத்ததோடு வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்தனர். தமிழ்க்கலாச்சாரம் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து போன்ற உலகளாவிய தமிழர்களின் வாழ்க்கை முறைக்கு அடிப்படை ஆகும். நம் கலாச்சாரம் மிகப்பழைமையானதாக இருப்பினும் இன்றுவரை மாறாது நிலைத்திருக்கிறது. நாம் நம் கலாச்சாரத்தை நினைத்து பெருமை கொள்வோம். அனைவருக்கும் நன்றி.

 

 

கலைச்சொல் அறிவோம்

1.Vowel                             -        உயிரெழுத்து                                     

2.Consonant                      -        மெய்யெழுத்து                                   

3.Homograph                      -        ஒப்பெழுத்து

4.Monolingual                     -        ஒருமொழி

5.Conversation                   -        உரையாடல்

6.Discussion                       -        கலந்துரையாடல்

7.Storm                            -        புயல்                                        

8.Tornado                          -        சூறாவளி                                 

9.Tempest                         -        பெருங்காற்று                                    

10.Land Breeze                  -        நிலக்காற்று

11.Sea Breeze                     -        கடற்காற்று

12.Whirlwind                      -        சுழல்காற்று

13.Classical literature           -        செவ்விலக்கியம்   

14.Epic literature                -        காப்பிய இலக்கியம்

15.Devotional literature        -        பக்தி இலக்கியம்   

16.Ancient literature            -        பண்டைய இலக்கியம்

17.Regional literature           -        வட்டார இலக்கியம்

18.Folk literature                -        நாட்டுப்புற இலக்கியம்

19.Modern literature            -        நவீன இலக்கியம்

 

 

 

 

 

சிறுவினா

1.தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?

  • பழமைக்குப் பழமையாய்த் தோன்றிய நறுங்கனி.
  • கடல்கொண்ட குமரிக்கண்டத்தில் நிலைத்து நின்று அரசாண்ட மண்ணுலகப் பேரரசு.
  • தென்னவனாம் பாண்டிய மன்னனின் மகள்.
  • உலகப்பொதுமறையாம் திருக்குறளின் பெரும் பெருமை.
  • பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு என விரிந்தமை.
  • நிலைத்த சிலப்பதிகாரமாய், அழகிய மணிமேகலையாய்ச் சிறப்புப் பெற்று விளங்குவது.
  • பொங்கியெழும் நினைவுகளால் தலைபணிந்து வாழ்த்துகிறார் பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

2.’புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது.’

இதுபோல் இளம்பயிர்வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.

  • நெல் நாற்று நன்றாக வளர்ந்துள்ளது.
  • தென்னம் பிள்ளைக்குத் தண்ணீர் விட்டேன்.
  • மாங்கன்று தளிர்விட்டது.
  • வாழைக்கன்று மழையின்றி வாடியது.
  • பூச்செடியின் கீழே சாண உரம் இட்டேன்.

3.’அறிந்தது, அறியாதது, புரிந்தது, புரியாதது, தெரிந்தது, தெரியாதது, பிறந்தது, பிறவாதது’ இவை அனைத்தையும் யாம் அறிவோம். அதுபற்றி உமது அறிவுரை எமக்குத் தேவை இல்லை. எல்லாம் எமக்குத் தெரியும்.

இக்கூற்றில் வண்ண எழுத்துகளில் உள்ள வினைமுற்றுகளைத் தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக.

வினைமுற்று                  -                 தொழிற்பெயர்

அறிந்தது                        -                 அறிதல்

அறியாதது                       -                 அறியாமை

புரிந்தது                           -                 புரிதல்

புரியாதது                         -                 புரியாமை

தெரிந்தது                        -                 தெரிதல்

தெரியாதது                      -                 தெரியாமை

பிறந்தது                          -                 பிறத்தல்

பிறவாதது                        -                 பிறவாமை

4.தோட்டத்தில் மல்லிகைப்பூ பறித்த பூங்கொடி, வரும் வழியில் ஆடுமாடுகளுக்குத் தண்ணீர்த் தொட்டியில் குடிநீர் நிரப்பினாள். வீட்டினுள் வந்தவள் சுவர்க்கடிகாரத்தில் மணி பார்த்தாள்.

இப்பத்தியில் உள்ள தொகைநிலைத் தொடர்களின் வகைகளைக் குறிப்பிட்டு, விரித்து எழுதுக.

தொகைநிலைத் தொடர்வகை

தொடர்

வகை

விரிவு

பூங்கொடி

உவமைத்தொகை

பூப்போன்ற கொடி

பூப்பறித்த

இரண்டாம் வேற்றுமைத்தொகை

பூ(ஐ)வைப் பறித்த

பூப்பறித்த பூங்கொடி

அன்மொழித்தொகை

பூவைப்பறித்த(பெண்)

பூங்கொடி

தண்ணீர்த்தொட்டி

இரண்டாம் வேற்றுமை உருபும்பயனும் உடன்தொக்கதொகை

தண்ணீரை 

உடைய தொட்டி

குடிநீர்

வினைத்தொகை

குடித்த நீர், 

குடிக்கின்ற நீர், 

 குடிக்கும் நீர்

சுவர்க்கடிகாரம்

ஏழாம் வேற்றுமை உருபும்பயனும் உடன்தொக்கதொகை

சுவரின் கண் 

உள்ள கடிகாரம்

ஆடுமாடுகள்

உம்மைத்தொகை

ஆடுகளும் மாடுகளும்

மல்லிகைப்பூ

இருபெயரொட்டுப் பண்புத்தொகை

மல்லிகை-சிறப்பு

பூ-பொதுப்பெயர்

மணிபார்த்தாள்

இரண்டாம் வேற்றுமைத்தொகை

மணியைப் பார்த்தாள்

 

5.’கண்ணே கண்ணுறங்கு!

காலையில் நீயெழும்பு!

மாமழை பெய்கையிலே

மாம்பூவே கண்ணுறங்கு!

பாடினேன் தாலாட்டு!

ஆடி ஆடி ஓய்ந்துறங்கு!’ – இத்தாலாட்டுப் பாடலில் அமைந்துள்ள தொடர் வகைகளை எழுதுக.

 

தொடர்

வகை

கண்ணே கண்ணுறங்கு

விளித்தொடர்

காலையில் நீ எழும்பு

வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்

மாமழை பெய்கையிலே

உரிச்சொற்றொடர்

மாம்பூவே கண்ணுறங்கு

விளித்தொடர்

பாடினேன் தாலாட்டு

வினைமுற்றுத்தொடர்

ஆடி ஆடி

அடுக்குத்தொடர்

ஓய்ந்துறங்கு

வினையெச்சத்தொடர்

 

6.வேலொடு நின்றான் இடுஎன்றது போலும்

 கோலொடு நின்றான் இரவு              - குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.

இக்குறளில் பயின்று வரும் அணி        - உவமை அணி.   

உவமை ஒரு வாக்கியமாகவும் உவமேயம் ஒரு வாக்கியமாகவும் வந்து இடையில் உவம உருபு வெளிப்படையாக வருவது உவமை அணி.

உவமேயம் - ஆட்சி அதிகாரத்தைக் கொண்டுள்ள அரசன் தன் அதிகாரத்தைக் கொண்டு வரி விதிப்பது.

உவமை - வேல் போன்ற ஆயுதத்தைக் காட்டி வழிப்பறி செய்வது.

உவமஉருபு - போலும்

ஆட்சி அதிகாரத்தைக் கொண்டுள்ள அரசன் தன் அதிகாரத்தைக் கொண்டு வரி விதிப்பது என்பது வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி செய்வதற்கு நிகரானது என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

நெடுவினா – 5 மதிப்பெண்கள்

1.மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப்பேச்சு ஒன்றை உருவாக்குக.

          அனைவருக்கும் இனிய வணக்கம். மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தையும் தற்போது ஒப்பிட்டுப் பார்ப்போம். மனோன்மணியம் சுந்தரனார் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் கடல் என்னும் ஆடையுடுத்திய நிலம் என்னும் பெண்ணுக்கு அழகு மிளிரும் முகமாகப் பரதக்கண்டம் திகழ்கிறது எனவும், அக்கண்டத்தில் தென்னாடும் அதில் சிறந்த திராவிடர்களின் திருநாடும் பிறை போன்ற நெற்றியாகவும் அதில் இட்ட மணம் வீசும் திலகமாகவும் இருப்பதாகக் கூறுகிறார். பெருஞ்சித்திரனார் தமிழ் வாழ்த்தில் பழமைக்குப் பழமையாய்த் தோன்றிய நறுங்கனி என்றும், கடல் கொண்ட குமரிக் கண்டத்தில் நிலைத்து அரசாண்ட மண்ணுலகப் பேரரசு என்றும், பாண்டிய மன்னனின் மகள் என்றும், திருக்குறளே, பத்துப்பாட்டே, எட்டுத்தொகையே, பதினெண்கீழ்க்கணக்கே, சிலப்பதிகாரமே, மணிமேகலையே என்றும் வாழ்த்துகிறார். சுந்தரனாரோ திலகத்தில் இருந்து வரும் வாசனை போல, அனைத்து உலகமும் இன்பம் பெறும் வகையில் எல்லாத் திசையிலும் புகழ் பெற்று இருக்கின்ற பெருமைமிக்க தமிழ்ப்பெண் என்கிறார். பெருஞ்சித்திரனாரோ சொல்லுதற்கு அரிய உன் பெருமைகளை என்னுடைய தமிழ் நாக்கு எவ்வாறு விரித்துரைக்கும் என வினா எழுப்புகிறார். பழம்பெருமையும் தனக்கெனத் தனிச் சிறப்பும் இலக்கிய வளமும் கொண்டது தமிழ் என்கிறார். சுந்தரனார் பாடலில் என்றும் இளமையாக இருக்கின்ற உன் சிறப்பான திறமையை வியந்து உன் வயப்பட்டு எங்கள் செயல்களை மறந்து உன்னை வாழ்த்துகிறோம் என்று வாழ்த்த, பெருஞ்சித்திரனார் பாடலில் வண்டானது செந்தாமரைத் தேனைக் குடித்துச் சிறகசைத்துப் பாடுவது போன்று நாங்கள் உன்னைச் சுவைத்து உள்ளத்தில் கனல் மூள, உன் பெருமையை எங்கும் முழங்குவதாகக் கூறுகிறார். இருவருமே தமிழின் பெருமைகளைச் சிறப்பாக எடுத்துரைத்து வாழ்த்துகின்றனர். வாழ்க தமிழ், வெல்க தமிழ். நன்றி, வணக்கம்.

நெடுவினா – 8 மதிப்பெண்கள்

1.தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக் குறிப்புகளை எழுதுக.

தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக் குறிப்புகள் –

காலவெள்ளத்தில் கரைந்துபோன மொழிகளுக்கிடையில் நீந்தித் தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளது தமிழ்.

தமிழின் சொல்வளம் போல் வேறு எம்மொழியிலும் இல்லை.

தாவரத்தின் அடி வகை    – தாள், தண்டு, கோல், தூறு, தட்டு, கழி, கழை, அடி.

கிளைப்பிரிவுகள்              – கவை, கொம்பு, கிளை, சினை, போத்து, குச்சு, இணுக்கு.

காய்ந்த அடி, கிளை          – சுள்ளி, விறகு, வெங்கழி, கட்டை.

இலை வகை                   – இலை, தாள், தோகை, ஓலை, சண்டு, சருகு.

கொழுந்து வகை              – துளிர், முறி, குருத்து, கொழுந்தாடை.                   

பூ                                    – அரும்பு, போது, மலர், வீ, செம்மல்.

பிஞ்சு வகை                    – பூம்பிஞ்சு, பிஞ்சு, வடு, மூசு, கவ்வை, குரும்பை, இளநீர், நுழாய், கருக்கல், கச்சல்.

குலை வகை                   – கொத்து, குலை, தாறு, கதிர், அலகு, சீப்பு.    

கெட்டுப்போன காய் வகை – சூம்பல், சிவியல், சொத்தை, வெம்பல், அளியல், அழுகல், சொண்டு.

பழத்தோல் வகை             – தொலி, தோல், தோடு, ஓடு, குடுக்கை, மட்டை, உமி, கொம்மை. 

மணி வகை                      – கூலம், பயறு, கடலை, விதை, காழ், முத்து, கொட்டை, தேங்காய், முதிரை.      

இளம் பயிர் வகை            – நாற்று, கன்று, குருத்து, பிள்ளை, குட்டி, மடலி, பைங்கூழ்.        

மொழிஞாயிறு தேவநேயப்பாவாணரின் சொல்லாய்வுக் கட்டுரைகள் நூலின் ஒரு துளியே மேற்கண்ட அனைத்தும்.

ஒரு மொழி பொதுமக்களாலும், அதன் இலக்கியம் புலமக்களாலும் அமையப்பெறும்.

வளர்ந்துவரும் இன்றைய சூழ்நிலைக்கேற்ப கன்னித்தமிழ் கணினித்தமிழ் ஆகிவிட்டது.

பழைமையான நூல்கள் இணையத்தளத்தில் வலம்வருகின்றன.

சொல்லாடல், கவியரங்கம், பட்டிமன்றம் என வலைத்தளம் இன்று இளைஞர்கள் தளமாய் மாறிவிட்டது.

தொடுதிரை, சுட்டி, நேரலை, இயங்கலை, உலவி என்று புதிய பெயர்கள் கொண்டு நான்காம் தமிழ் மிளிர்கிறது.

புதிய சொல்லாக்கம் செயற்கை நுண்ணறிவு பெருகிவரும் இக்காலத்திற்கு அவசியமானதாகும்.

மெல்லத் தமிழ் இனிச்சாகும் என்று இனி எவரும் சொல்லக் கூசும் நிலை ஏற்படட்டும்.

அகராதிகள் புதிய சொற்களால் நிரம்பி வழியட்டும்.

விரிவானம் – 8 மதிப்பெண்கள்

1.அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள்கதைப்பகுதி கொண்டு விவரிக்க.

கிராமத்து வெள்ளந்தி மனிதர்கள் காட்டும் விருந்தோம்பல் எப்பவும் மனசுக்குள் பசுமையாக இருக்கும். அவர்களது இயல்பான வரவேற்பும் எளிமையான உணவும் மதிய வேக்காட்டில் நடந்துவந்த களைப்பை மறக்கச் செய்யும்.  பசித்த வேளையில் வந்தவர்களுக்குத் தம்மிடம் இருப்பதையே பகிர்ந்து கொடுக்கிற நேயம் கிராமத்து விருந்தோம்பல். அப்படி நடக்கும் ஒரு நிகழ்வு நம் முன் காட்சியாகிறது.

புதியவனின் தோற்றம்

தற்செயலாக, புளிய மரத்தில் சாய்ந்து உட்கார்ந்திருந்தவனை அன்னமய்யா கண்டான்.  தாடியும் அழுக்கு ஆடையுடனும் இருந்த அவன் வயோதிகன் போலவும் சந்நியாசி போலவும் இருந்தான். ஆனால், அவன் வாலிபன்.  நடக்க முடியாமல் உட்கார்ந்து உட்கார்ந்து உடல் வாடிக் களைத்து, நடந்து வந்தவன். அவன் கண்களில் தீட்சண்யம் தெரிந்தது.        

அன்னமய்யாவின் அரவணைப்பு

வாலிபன், அன்னமய்யாவைக் கண்டதும் சிறுபுன்னகை செய்தான்பேச விருப்பம் இல்லாதவன் போல் இருந்தான். அன்னமய்யா, அவனையே பார்த்துக் கொண்டிருந்தான்.  அலுப்புத் தீர்ந்தவுடன் அந்த வாலிபன், குடிக்கத் தண்ணீர் கேட்டான்.  அன்னமய்யா, "அருகில் அருகு எடுத்துக் கொண்டிருப்பவர்களிடம் இருந்து நீச்சுச் தண்ணீர் வாங்கி வரட்டுமா?" என்றான். வாலிபன் எழுந்திருக்க ஒத்தாசையாகக் கையை நீட்டினான்.  தோளைப் பிடித்து நடக்கும்படி வேண்டினான்.

அன்னமய்யா அளித்த ஜீவ ஊற்று

வேப்ப மரத்தடியில் வைக்கப்பட்டிருந்த கலயத்துக் கஞ்சியின் நீத்துப் பாகத்தை வடித்துக் கொடுத்தான்.  வாங்கி உறிஞ்சும்போது வாலிபனின் கண்கள் சொருகின. மிடறு தொண்டை வழியாக இறங்குவதன் சுகத்தை முகம் சொல்லியது. உட்கார்ந்து குடிக்கச் சொன்னான்.  சோற்றின் மகுளியை வார்த்துக் கொடுத்தான். மடக்கு மடக்காய் ஜீவ ஊற்று உள்ளே இறங்கியது. வேப்பமர நிழலே சொர்க்கமாய், படுத்ததும் தென்றல் காற்று வந்து அயரச் செய்தது.  வயிறு நிறையப் பாலைக் குடித்து மடியிலே தூங்கும் குழந்தையின் முகத்தைத் தாய் பார்ப்பது போல அன்னமய்யா அவனையே பார்த்துக் கொண்டிருந்தான்.

பெயர்ப்பொருத்தம்

வாலிபனின் சிறு தூக்கம் முடியும் வரை காத்திருந்தான்.  எழுந்த வாலிபன், நன்றி கலந்த புன்னகை காட்டினான். அன்னமய்யா வாலிபனிடம், "உங்கள் ஊர்ப்பெயர் என்னஎங்க இருந்து வர்றீங்க? எங்க போகணும்?" என்று அன்புடன் கேட்டான். அந்த வாலிபன், " நான் ரொம்ப தொலைவில் இருந்து வர்றேன். சொந்தப் பெயர் பரமேஸ்வரன். அதை மறந்து விடு. மணி என்று கூப்பிடு.  ஆமாம், உன் பெயர் என்ன?" என்று கேட்டான்.  

"அன்னமய்யா" 

"அன்னமிட்டவனின் பெயர் அன்னமய்யா. என்னே பெயர்ப் பொருத்தம்!" என்று எண்ணிக் கொண்டான். "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே".

வெள்ளந்தி மனிதர்கள்

வாலிபனை, அன்னமய்யாவின் நண்பன் சுப்பையாவின் நஞ்சை நிலத்துக்குக் கூட்டி சென்றான். அங்கு அருகு எடுத்து கொண்டிருந்தவர்கள், சாப்பிட வந்தார்கள். மணியின் கையில் கால் உருண்டைக் கம்மஞ்சோற்றை வைத்தார்கள். நடுவில் குழி பறித்து அதில் துவையலை இட்டார்கள்.  கம்பஞ்சோற்றை அவர்கள் சாப்பிட்ட வேகம், ஆர்வம், அனுபவிப்பே அது  எவ்வளவு சுவையாக இருக்கும் என்பதைக் காட்டியது. அரை உருண்டையைச் சாப்பிட்ட மணி மறுபடியும் அயர்ந்து தூங்கி விட்டான். 

கட்டுரை , கடிதங்கள்

1.சான்றோர் வளர்த்த தமிழ்

முன்னுரை

                    முதல் மாந்தன் பேசிய மொழியான தமிழின் தொன்மை ஆய்வுக்குட்பட்டது. உலகின் பல மொழிகளுக்குத் தாய்மொழியாக இருப்பதும் தமிழே. அத்தமிழை வளர்க்க முயன்ற சான்றோர்கள் பலரை வளர்த்தது தமிழ். தமிழால் சான்றோரும் சான்றோரால் தமிழும் வளர்ந்ததை இலக்கிய உலகு நன்கு அறியும்.

வள்ளுவரும் ஔவையும்

          உலகப்பொதுமறை தந்த வள்ளுவர் தமிழை உலகறியச் செய்தார். மூன்றடியில் உலகளந்த இறைவன் போல் ஈரடியில் உலகளந்த புலவன் வள்ளுவரே. பல மொழிகளில் பெயர்க்கப்பட்ட குறள் தமிழின் புகழைப் பறைசாற்றும். ஓரடியில் ஆத்திசூடி தந்த ஔவையும் தமிழின் சிறப்பை வரிசைப்படுத்தினார். தமிழ் வளர்க்க ஔவை வேண்டி நெல்லிக்கனி தந்த அதியமானும் தமிழ் வளர்த்தவரே.

இலக்கியத்தில் தமிழ்

          ஐம்பெருங்காப்பியங்களும் ஐஞ்சிறு காப்பியங்களும் இதிகாசங்களும் கண்டவர்கள் தமிழின் இலக்கிய வாழ்வை மேம்படுத்தினர். கம்பன் தந்த உவமையும் சொல்லாடலும் தமிழின் பெருமைக்குச் சான்றுகள். அறநூல்களை அள்ளித்தந்த சான்றோர் அகமும் புறமும் படைத்து தமிழின் தமிழரின் தமிழ்நாட்டின் உயர்வை உலகிற்கு உணர்த்தினர்.

 

சிற்றிலக்கியத்தில் தமிழ்

          பரணி பாடிய செயங்கொண்டார் போன்றோரும், உலா பாடிய ஒட்டக்கூத்தர் போன்றோரும், குறவஞ்சி பாடிய திரிகூடராசப்பர் போன்றோரும், தூது தந்த புலவர்களும், கலம்பகம் தந்த புலவர்களும், பிள்ளைத்தமிழ் பாடிய புலவர்களும் 96 சிற்றிலக்கிய வகைகளை வழங்கிய பலரும் தமிழை வளர்த்தனர்.

பிறநாட்டார்

          வீரமா முனிவர் சதுரகராதி தந்து தமிழால் பெருமை பெற்றார். போப் தமிழின் சிறப்புகளை மொழிபெயர்ப்பின் மூலம் உலகறியச் செய்தார். பிறநாட்டார் பலர் தமிழைப் போற்றி தமிழால் அறியப் பெற்றனர். பிறமொழி பேசுபவர்களும் தமிழை அறிய ஆர்வம் கொண்டனர்.

மொழிப்பற்றாளர்

          அகரமுதலி வெளியிட்ட தேவநேயப் பாவாணரும் பல நூல்களைப் பதிப்பித்த தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதரும் மொழித்தியாகிகளும் பாரதியார், பாரதிதாசன், சுரதா வழிவந்த பரம்பரைக் கவிஞர்களும் மொழிப்பற்றோடு தமிழை வளர்த்து அழியாப் புகழ் அடைந்தனர்.

முடிவுரை

          அன்று முதல் இன்று வரை தமிழை வளர்க்கச் சான்றோர் பலர் தோன்றியுள்ளனர். தமிழை வளர்க்க எண்ணிய அனைத்துச் சான்றோர்களையும் தமிழ் வளர்த்தது என்பதே மறுக்க இயலா உண்மையாகும். தமிழ் வளர்ப்போம், புகழ் பெறுவோம்.                                                        

2.மாநில அளவில் நடைபெற்ற மரம் இயற்கையின் வரம் எனும் தலைப்பிலான கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.

வாழ்த்து மடல்

7, பாரதியார் தெரு,    

                                                                                                                             மதுரை.

                                                                                                                       19-01-2022.

அன்புள்ள நண்பா,

நானும் என் பெற்றோரும் இங்கே நலமாக இருக்கிறோம். அதுபோல் அங்கு நீயும் உன் பெற்றோரும் நலமாக இருக்கிறீர்களா ? நான் இங்கு நன்றாகப் படிக்கிறேன். நீயும் அங்கு நன்றாகப் படிப்பாய் என்று எண்ணுகிறேன்.

மாநில அளவில் நடைபெற்ற ” மரம் இயற்கையின் வரம் “ என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று நீ முதல் பரிசு பெற்றாய் என்ற செய்தியை நாளிதழ் மூலம் அறிந்து கொண்டேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஏற்கனவே நீ கட்டுரைப் போட்டிகள் பலவற்றில் வெற்றி பெற்று பரிசு பெற்றுள்ளாய். உன் அழகான கையெழுத்தும் கருத்துச் செறிவும் நூலகப்பயன்பாடும் உறுதியாக உனக்கு ஒவ்வொரு போட்டியிலும் முதல் பரிசைப் பெற்றுத்தரும் என்பதில் ஐயமில்லை. இருப்பினும் மாநில அளவில் முதல் பரிசு பெற்றுள்ளதற்கு என்னுடைய பாராட்டுகள். மேலும் பல போட்டிகளில் கலந்து கொண்டு நீ முதல் பரிசு பெற வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்.

என் மடல் கண்டு நீ அவசியம் பதில் எழுத வேண்டும். உன் பதில் மடலைக் காண ஆவலோடு காத்திருக்கிறேன்.

இப்படிக்கு,

                                                                                                 உன் அன்புள்ள தோழன்,

                                                                                                          அ.முகிலன்.

உறை மேல் முகவரி –

திரு.ப.எழிலன்,

5, கம்பர் தெரு,

சென்னை.  

3.உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலைகூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.

புகார்க் கடிதம்

அனுப்புநர்

அ.கபிலன்,

5, அண்ணா தெரு,

மதுரை.

பெறுநர்

உணவுப் பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,

உணவுப் பாதுகாப்புத் துறை,

மதுரை.

மதிப்பிற்குரிய ஐயா,

பொருள் - உணவு தரமற்றதாகவும் விலை கூடுதலாகவும் இருப்பது குறித்து நடவடிக்கை எடுப்பது சார்பாக...

வணக்கம். நேற்று மாலை நான் மதுரையில் உள்ள குறிஞ்சி உணவு விடுதியில் உணவு அருந்தினேன். அங்கு வழங்கப்பட்ட உணவு தரமற்றதாக இருந்தது. அரிசியில் கல் நீக்கப்படவில்லை. காய்கறி தரம் இல்லாததாக இருந்தது. விலையும் மிக அதிகமாக இருந்தது. தரமற்ற அந்த உணவினை நான் என்னுடைய கைப்பேசியில் படம் எடுத்து வைத்துள்ளேன். விலை அதிகமாக இருந்த அந்த விடுதியின் ரசீது என்னிடம் உள்ளது. அதன் நகலை இத்துடன் இணைத்துள்ளேன். தாங்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

மிக்க நன்றி.

நாள் – 10-07-21                                                                                  இப்படிக்கு,

இடம் - மதுரை                                                                          தங்கள் உண்மையுள்ள,     

அ.கபிலன்.

உறை மேல் முகவரி –

உணவுப் பாதுகாப்பு ஆணையர்,

உணவுப் பாதுகாப்புத் துறை,

மதுரை.

1.நூலக உறுப்பினர் படிவம்

விருதுநகர் மாவட்ட நூலக ஆணைக்குழு

மைய / கிளை /  ஊர்ப்புற நூலகம் - அழகாபுரி ஊர்ப்புற நூலகம்

உறுப்பினர் சேர்க்கை அட்டை                                                             அட்டை எண் :  .........                                                                          உறுப்பினர் எண்  ; ............

1. பெயர்                                    :         த. அன்பு

2. தந்தை பெயர்                        :         தமிழரசன்

3. பிறந்த தேதி                           :         25.2.2000

4. வயது                                    :         21

5. படிப்பு                                    :         பத்தாம் வகுப்பு

6. தொலைபேசி எண்                :         9876543210

7. முகவரி                                           1/3, அண்ணா சாலை, பாரதி நகர்,

(அஞ்சல் குறியீட்டு   எண்ணுடன்)       :         விருதுநகர் - 626001

நான்   ஊர்ப்புற நூலகத்தில்  உறுப்பினராகப்  பதிவு செய்ய இத்துடன் காப்புத்தொகை  ரூ   50   சந்தா தொகை  ரூ 100 ஆக மொத்தம் ரூ 150  ரொக்கமாகச் செலுத்துகிறேன்.  நூலக நடைமுறை மற்றும் விதிகளுக்குக் கட்டுப்படுகிறேன் என உறுதியளிக்கிறேன் .

இடம் : விருதுநகர்,                                                                     தங்கள் உண்மையுள்ள,

நாள் : 19 .01 .2022                                                                                     த.அன்பு                          

திரு / திருமதி / செல்வி / செல்வன்   த.அன்பு   அவர்களை எனக்கு நன்கு தெரியும் என சான்று அளிக்கிறேன்.

                                                                                                பிணைப்பாளர் கையொப்பம்

 அலுவலக முத்திரை                                                                  ( பதவி மற்றும் அலுவலகம் )

                             மாநில /  மைய அரசு அதிகாரிகள்,  கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள்,  

                       உயர் / மேல்நிலைப்பள்ளி  தலைமையாசிரியர்கள், சட்டமன்ற /நாடாளுமன்ற

                        உறுப்பினர்கள்,  நகராட்சி /மாநகராட்சி /ஒன்றிய  / பேரூராட்சிஉறுப்பினர்கள்)

 

2.மேல்நிலை வகுப்பு -  சேர்க்கை விண்ணப்பம்

 

சேர்க்கை எண்  : .......                  தேதி : 19. 01.2022           வகுப்பும் பிரிவும்: 11 - அ

1. மாணவ/ மாணவியின் பெயர்                      :         க. மதன்

2. பிறந்த தேதி                                              :         16.07.2006

3. தேசிய இனம்                                             :         இந்தியன்

4. பெற்றோர் / பாதுகாவலர் பெயர்                   :         கண்ணன் - ராதா

5. வீட்டுமுகவரி                                            :         25, கம்பர் தெரு, விருதுநகர்.

6. இறுதியாகப் படித்து முடித்த வகுப்பு            :         பத்தாம் வகுப்பு

7. பயின்ற மொழி                                           :         தமிழ்

8. பெற்ற மதிப்பெண்கள்                                :         487/ 500

9. இறுதியாக படித்த பள்ளியின் முகவரி         :         அரசு உயர்நிலைப் பள்ளி, விருதுநகர்.  

 

தேர்வின் பெயர்

பதிவு எண் – ஆண்டு

பாடம்

மதிப்பெண் (100)

 

அரசு பொதுத்தேர்வு

 

102534

2020

தமிழ்

95

ஆங்கிலம்

95

கணிதம்

99

அறிவியல்

99

சமூகஅறிவியல்

99

மொத்தம்

487

 

10. மாற்றுச் சான்றிதழ் இணைக்கப்பட்டுள்ளதா?       : ஆம்

11.தாய்மொழி                                                          : தமிழ்

12.சேர விரும்பும் பாடப் பிரிவும் பயிற்று மொழியும்     : கணிப்பொறியியல் /தமிழ்

                                                                                                க.மதன்

மாணவ  / மாணவியின் கையெழுத்து

3.தமிழ்நாடு விளையாட்டு  மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பப் படிவம்

  1. மாணவரின் பெயர்                               - செ.பானுமதி
  2. பாலினம்                                             - பெண்
  3. பிறந்த தேதி                                        - 03-02-2004
  4. தேசிய இனம்                                      - இந்தியன்
  5. பெற்றோர்/பாதுகாவலர் பெயர்               - க.செல்வம்
  6. இரத்த வகை                                      - 0+
  7. உயரம் , எடை                                     -  120செமீ   43 கிகி
  8. வீட்டு முகவரி                                     - 7, பாரதி தெரு, மதுரை.
  9. தொலைபேசி/அலைபேசி எண்            - 9876543210
  10. இறுதியாகப் படித்து முடித்த வகுப்பு      - பத்தாம் வகுப்பு
  11. பள்ளியின் முகவரி                              - அரசு மேனிலைப்பள்ளி, சிம்மக்கல், மதுரை.
  12. சேர விரும்பும் விளையாட்டு                - பூப்பந்து

சேர்க்கை எண் -                                                                       மாணவரின் கையெழுத்து

                                                                                                          செ.பானுமதி.

தேதி – 07-05-2022

இடம் – மதுரை

                                                                   பெற்றோர்/பாதுகாவலரின் கையெழுத்து

 

4.பணி வாய்ப்பு வேண்டி தன் விவரப் பட்டியல் நிரப்புதல்

  1. பெயர்                                                           - செ.கபிலன்
  2. பாலினம்                                                       - ஆண்
  3. பிறந்த நாள், வயது                                         - 03-02-2000,     21
  4. தேசிய இனம்                                                - இந்தியன்
  5. பெற்றோர்/பாதுகாவலர் பெயர்                         - க.செல்வம்
  6. வீட்டு முகவரி                                               - 7, பாரதி தெரு, மதுரை.
  7. தொலைபேசி/அலைபேசி எண்                      - 9876543210
  8. பத்தாம் வகுப்பில்பெற்ற மதிப்பெண்கள்           - 480
  9. தாய்மொழி                                                    - தமிழ்
  10. பயின்ற மொழிகள்                                        - தமிழ், ஆங்கிலம்
  11. தட்டச்சு                                                        - தமிழ், ஆங்கிலம்
  12. கணினி                                                        - ஜாவா

மேற்கண்ட விவரங்கள் அனைத்தும் உண்மையென உறுதி கூறுகிறேன். தங்கள் நிறுவனத்தில் இளநிலை உதவியாளர் பணியினைத் தந்தால் என் பணியைச் சிறப்பாகவும் உண்மையாகவும் செய்வேன் என உறுதியளிக்கிறேன்.

                                                                                      இப்படிக்கு,

                                                                             தங்கள் உண்மையுள்ள,

                                                                                      செ.கபிலன்.

தேதி – 19-01-2022

இடம் – மதுரை

நிற்க அதற்குத் தக...

இயல் 1              

பக்க எண் 24

இதில் நீங்கள் செல்லும் வழி யாது? உங்கள் நண்பருக்குக் காட்டும் வழி யாது?

நாங்கள் செல்லும் வழி இன்சொல் வழி.

எங்கள் நண்பருக்குக் காட்டும் வழி இன்சொல் வழி.

இயல் 2             

பக்க எண் 48

புயலின் அறிவிப்பைக் கேட்ட என் செயல்கள்–

புயலின்போது வெளியே செல்ல மாட்டேன்.

குடும்பத்தினரையும் வெளியே செல்ல வேண்டாம் என்று கூறுவேன்.

தொலைபேசி, மின்சாதனங்கள் பயன்படுத்துவதைத் தவிர்ப்பேன்.

குடும்பத்தினர் மாடியில் இருப்பதைத் தவிர்த்து தளப்பகுதியிலேயே தங்குமாறு கூறுவேன்.

வானொலி அறிவிப்பைக் கேட்டு அதனைப் பின்பற்றுவேன்.

இயல் 3             

பக்க எண் 69

மருத்துவர் கு.சிவராமன் கருத்திற்கு சமூக அக்கறையுடனான பதில் –

ஆரோக்கியம் தரும் இயற்கை உணவை மட்டுமே உண்ண வேண்டும்.

உடல் நலத்தைக் கெடுக்கும் துரித உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக



 

புத்தகத்திறவுகோலால் பகுத்தறிவு திற

பத்தோடு பதினொன்றல்ல நீ

இத்தோடு முடிவதல்ல வாழ்வு

இத்தரை மீதில் நூல்களாய் உலவு

நத்தி வாழும் வாழ்வு நமக்கெதற்கு

நாளும் ஒரு புத்தகமெனப் பழகு.


 

தரை மீதில் மரம் சாய்த்தால் – இத்

தரணியிலே வாழ்வதெப்படி

நுரையீரல் அடைக்கும் காற்று

மரம் தானே தரவேண்டும்

அண்டவெளி எங்கும் புகை

மண்டலம் ஆக்கிவிட்டால்

கொண்ட உயிர்வளி குறைந்து

கூண்டோடு அழிந்தொழிவோம்



இல்லத்தில் வறுமை இருக்கலாம்

உள்ளத்தில் வறுமை கூடாது

அள்ளிக் கொடுக்கும் இடத்தில்

கிள்ளிக் கொடுங்கள் அதுபோதும்

சொல்லிக் கொடுப்போம் தலைமுறைக்கு

வள்ளல் தன்மை என்னவென்று



   

    தண்ணீர் நிறைந்த குளம்

    தவித்தபடி வெளிநீட்டும் கை

    கரையில் கைபேசி படமெடுத்தபடி

    கவலையின்றி பலர்

    மனிதர்களை மறந்து

    மனிதநேயம் குறைந்து

 

தமிழ்த்துகள்

Blog Archive