கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, March 24, 2021

கத்தரிக்காய் - தெனாலிராமன் கதை kathirikay thenaliraman tamil story

ஒரு முறை தெனாலிராமனுக்குக் கத்தரிக்காய் சாப்பிட வேண்டும் என்று அதீத விருப்பம் ஏற்பட்டது. அரண்மனைத் தோட்டத்தில் பிஞ்சு கத்தரிக்காய் அதிகமாக விளைந்திருப்பதைக் கேள்விப்பட்டார்.

ஆனால் அது அரசாங்கத்திற்குச் சொந்தமானது. நாம் உபயோகிக்கக் கூடாது என்ன செய்வது. என்னவென்றாலும் இன்று கத்தரிக்காய் சாப்பிட்டே தீருவது என்று தீர்மானித்த தெனாலிராமன் ஒரு ஆலோசனை செய்தார். காவலாளிக்குத் தெரியாமல் கத்தரிக்காய் அனைத்தையும் சத்தமில்லாமல் பறித்துக் கொண்டார்.

வீட்டுக்குச் சென்று மனைவியிடம் "இன்றைக்கு விதவிதமாய் கத்தரிக்காய் பதார்த்தம் செய்" என்றார். தெனாலிராமன் கொண்டுவந்த கத்தரிக்காய் அரண்மனை தோட்டத்திலிருந்து பறித்து வந்தது என்று தெரிந்ததும் தெனாலிராமனது மனைவி மிகவும் கலக்கமடைந்தார்.

தெனாலிராமன் "நீ பயப்படாதே! எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன். நீ சமைத்து வை" என்றார். அவரது மனைவியும் மறுபேச்சு பேசாமல் கத்தரிக்காய் குழம்பு, கத்தரிக்காய் கூட்டு என்று வித விதமாகச் செய்து வைத்தார். இருவரும் சாப்பிடத்தயாரானார்கள்.

தெனாலிராமன் தனது மகனை எங்கே என்று கேட்டார். அவன் வெளித்திண்ணையில் படுத்து உறங்கிக் கொண்டிருப்பதை மனைவி தெரிவித்தார். உடனே தெனாலிராமனுக்கு ஒரு யோசனை தோன்றியது.

அவர் ஒரு குடம் நிறைய தண்ணீரைக் கொண்டுவந்து திண்ணையில் படுத்திருந்த தனது மகன் மீது ஊற்றினார். பதறியடித்து எழுந்த மகனைப் பார்த்து "வெளியே மழை பெய்கிறது, உள்ளே போய் படுத்துக் கொள்" என்று கூறினார்.

அரைத்தூக்கத்தில் இருந்த மகனும் அவர் சொன்னதைக் கேட்டவுடன் வேக வேகமாக வீட்டுக்குள் சென்றான். படுத்துறங்கப் போன்றவனை தெனாலிராமன் எழுப்பி "கத்தரிக்காய் சாப்பாடு ருசியாய் இருக்கிறது, சாப்பிட்டு விட்டு தூங்கு" என்று கூறினார்.

அவனும் தூக்கக்கலக்கத்துடனேயே நன்றாகச் சாப்பிட்டான். பிறகு எல்லோரும் படுத்து நிம்மதியாய் தூங்கினார்கள்.

மறுநாள், தெனாலிராமன் அரண்மனைத் தோட்டத்தில் கத்தரிக்காய் பறித்த விசயம் எப்படியோ மன்னருக்குத் தெரிந்து போனது.

மன்னர் தெனாலிராமனை அழைத்து வரச் சொன்னார். நடக்கப் போவதை யூகித்துக் கொண்ட தெனாலிராமனும் மன்னர் முன் சென்று நின்றார்.

மன்னர் தெனாலியைப் பார்த்துக் கேட்டார்" தெனாலிராமா! அரண்மனைத் தோட்டத்தில் கத்தரிக்காய் எல்லாம் காணாமல் போனது உனக்குத் தெரியுமா ? என்றார். தெனாலிராமனோ எதுவும் அறியாதது போல "என்ன? அரண்மனைத் தோட்டத்துக் கத்தரிக்காய் காணாமல் போனதா?" என்றார்.

மன்னரோ விடுவதாய் இல்லை. "ஒன்றும் அறியாதது போல் கேட்கிறாய் ராமா! நீ தான் கத்தரிக்காய் அனைத்தையும் பறித்ததாக நான் கேள்விப்பட்டேன். உண்மையை ஒத்துக் கொள்" என்றார். தெனாலி ராமனோ "இல்லவே இல்லை" என்று சாதித்தார்.

மன்னர் உடனே தெனாலிராமா "நீ உனது மகனை அழைத்துவா. குழந்தைகள் பொய் சொல்லாது. நேற்று நீங்கள் என்ன சாப்பிட்டீர்கள் என்பதை நான் உன் மகனை விசாரித்துத் தெரிந்து கொள்கிறேன். " என்றார்.

தெனாலிராமனது மகனைக் காவலாளிகள் அழைத்து வந்தார்கள். மன்னன் சிறுவனிடம் அன்பாக விசாரித்தார். "தம்பி நேற்று உஙகள் வீட்டில் என்ன சாப்பிட்டீர்கள்?" உடனே சிறுவன் சொன்னான் "கத்தரிக்காய் குழம்பு, கத்தரிக்காய் கூட்டு மற்றும் சாதம் எல்லாம் சாப்பிட்டோம். மிகவும் ருசியாக இருந்தது."

உடனே மன்னன் தெனாலிராமனைப் பார்த்தார். இப்போது மாட்டிக் கொண்டாயா தெனாலிராமா. இப்போதாவது உண்மையை ஒத்துக் கொள்" என்றார். தெனாலிராமனோ விடாப்பிடியாக மறுத்தார். "மன்னா, இவன் இரவில் கனவு கண்டு அதை உளறுகிறான். நன்றாக விசாரியுங்கள். நீங்கள் நம்பும்படியாக அவன் கூறினால் நான் உண்மை என‌ ஒத்துக் கொள்கிறேன்". என்றார்.

மன்னன் சிறுவனைப் பார்த்து மீண்டும் கேட்டார். "குழந்தாய் நேற்று உங்கள் வீட்டில் என்ன நடந்தது என்று விளக்கமாகச் சொல்" சிறுவனோ நேற்று இரவு  மழை பெய்ததா! அப்பா என்னை வீட்டுக்குள் கூட்டிக் கொண்டு போனாரா...! அப்போ கத்தரிக்காய் வைத்து சாப்பிடச் சொன்னார்களா...! சாப்பிட்டிவிட்டு பிறகு நான் உறங்கி விட்டேன்" என்றான்.

தெனாலிராமனோ நேற்று மழை பெய்ததா மன்னா! நீங்களே சொல்லுங்கள் என்று மன்னரைக் கேள்வி கேட்டார்.

மன்னர் குழம்பிப் போனார். அவையில் இருந்தவர்களை விசாரித்தார். நேற்று நகரத்தின் எந்தப்பகுதியிலும் மழை பெய்யவில்லை என்று எல்லோரும் சொன்னார்கள்.

மன்னரும் சரி தெனாலிராமன் சொன்னதைப்போல குழந்தை கனவில் கண்டதைத்தான் சொல்கிறான் என்று சொல்லி தெனாலிராமனையும் விடுவித்தார். மனதிற்குள் மகிழ்ந்து கொண்டே தெனாலிராமனும் இடத்தைக் காலிசெய்தார்.

பிறிதொருநாள் மன்னரிடம் தாம்தான் கத்தரிக்காயைத் திருடியதாக ஒத்துக் கொண்டு நடந்தவைகளைச் சொல்ல மன்னர் ஆச்சரியத்துடன் சிரித்து மகிழ்ந்தார். பிறகு தெனாலிராமனின் சாதுர்யத்தை மெச்சி பல பரிசுகளை அளித்து மகிழ்ந்தார்.

 

தமிழ்த்துகள்

Blog Archive