கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, March 24, 2022

காச நோயை ஒழிப்போம் தமிழ்ப் பேச்சு tamil speech kasanoy tab kaasa noyai olippom

காச நோயை ஒழிப்போம்

முத்துத் தமிழ் படித்து மூன்று நெறி வளர்த்து கத்தும் கடல் மீது களங்களில் விளையாடும் தென்பாண்டி மண்டலமே! முச்சங்கம் வைத்து மூவேந்தர் ஆட்சி செய்த தமிழ் வளர்த்த மண்ணில் பேசவே எத்தனிக்கும் என் முயற்சி ஒரு குழந்தைத்தனமான நிகழ்ச்சியே!

படமாடும் தெய்வங்கள் எல்லாம் நம் துன்பங்களைப் பார்த்தபடி இருந்தாலும் நடமாடும் தெய்வங்களாம் நம் மருத்துவர்கள் அர்ப்பணிப்போடு மக்கள் உயிரை மீட்டுத் தருவதற்காக தங்கள் உயிரைத் துச்சமென மதித்துப் பணியாற்றுகிறார்கள். அவர்களின் தன்னலமற்ற பணிக்கு என் தலையாய வணக்கங்கள்.

எத்தனையோ நோய்கள் இத்தரணியில் மக்களைப் பிணியாளர்களாக ஆக்கிக் கொண்டிருந்தாலும் காசநோய் மட்டுமே அவர்களை உருகிக் கொண்டிருக்கிறது. என்பேன் நான் பிற நோயாளிகளைப் பார்த்தாலும் கண்டு பிடிக்க முடியாது. அவர் நோயாளி தான் என்று ஆனால் காச நோய் வந்தவர்கள் மட்டும் தும்மலும் இருமலும் வெளிவர தங்களைத் தாங்களே காட்டிக் கொடுத்து விடுவார்கள். அதுவே பிறருக்குப் பரவும் வழியாகவும் அமைந்து விடுகிறது என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். மைக்ரோ பாக்டீரியம் டியூபர்குளோசிஸ் என்ற பாக்டீரியாவால் பரவக் கூடிய நோய் காசநோய். இதனை எலும்புருக்கி நோய் என்றும் நாம் கூறுகிறோம். உலக சுகாதார அமைப்பின் கணக்குப்படி 2016 இந்தியாவில் 2.79 மில்லியன் காசநோய் பாதிக்கப்பட்ட மக்கள் இருந்து இருக்கிறார்கள் இவர்களில் ஏறத்தாழ 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல் என்று உரைத்திருக்கிறார் வான்புகழ் வள்ளுவர்.

 இதனைக் கருத்தில்கொண்டு நம் அரசும் திருத்தப்பட்ட தேசிய காசநோய் தடுப்பு திட்டம் ஆர் என் டி சி பி மூலமாக 1997ஆம் ஆண்டு முதல் இலவச சிகிச்சை வழங்கி வருகிறது. டி ஓ டி எஸ் என்று சொல்லப்படக்கூடிய கூட்டு மருந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் இந் நோயைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும். ஹெல்த் விசிட்டர் என்று சொல்லப்படக்கூடிய மருத்துவப் பணியாளர் மருந்து கொடுத்தல் கண்காணித்தல் காசநோய் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் சளி பரிசோதனை மற்றும் எக்ஸ்ரே எடுத்துப் பரிசோதித்தல் என்ற ஐந்து நிலைகளில் காசநோய்க்குச் சிகிச்சை அளிக்கிறார். இச்சிகிச்சை மூலம் 6 முதல் 8 மாதங்களில் காச நோய் கட்டுக்குள் வந்துவிடும். காசநோய் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை ஆரம்பித்த இரண்டு மாதங்களிலேயே தொந்தரவுகள் குறைந்துவிடும். இதனால் தனக்கு நோய் தீர்ந்து விட்டதாக நினைத்து தொடர்ந்து சிகிச்சை பெறாமல் விட்டு விட்டால் அவர்கள் காசநோயின் இரண்டாவது நிலை என்று சொல்லப்படக்கூடிய மல்டி ட்ரக் ரேசிஸ்டன்ட் டிபி மற்றும் எக்ஸ்ட்ரீம் டிரக் ரேசிஸ்டன்ட் டிபி என்ற நிலைக்குச் சென்று விடுவார்கள்.

காலை மாலை உலாவி நிதம்
காற்று வாங்கி வருவோரின்
காலைத் தொட்டுக் கும்பிட்டுக்
காலன் ஓடிப் போவானே என்று பாடினார் கவிமணி தேசிக விநாயகனார்.

தொடர்ந்த சளி, எடை குறைவு, காய்ச்சல், மார்பு வலி, இரவில் அதிகமாக வியர்த்தல், கை கால் பலம் குறைவு, பசியின்மை, இடைவெளியில்லாமல் இருமுதல் இவையெல்லாம் காசநோயின் அறிகுறிகள். இதை நாம் முன்கூட்டியே அறிந்து விட்டால் காசநோயை லேட்டண்ட் டிபி என்று சொல்லப்படக்கூடிய ஆரம்ப நிலையிலேயே தடுத்து விடமுடியும் உலகில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்குக் காச நோய்க் கிருமி இருப்பதாகக் கண்டுபிடித்துள்ளார்கள் ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் 90 லட்சம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். அதில் 17 லட்சம் பேர் இறந்து விடுகிறார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் புள்ளி விவரங்களைச் சொல்லி உள்ளது. காச நோய் என்பது நுரையீரல், மூளை, சிறுநீரகம், முதுகெலும்பு, முதுகுத்தண்டு என்று உள்ளுறுப்புகளை எல்லாம் ஒவ்வொன்றாகத் தின்று தீர்க்கக் கூடிய நோய் என்பது பல பேருக்குத் தெரிவதில்லை. அதனால் தான் இதனை மேலை நாடுகளில் உடல் தின்னும் நோய் என்று சொல்லுகிறார்கள். இந்நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் புரதம் மிக முக்கியமான தேவையாகும். புரதச் சத்து மிக்க உணவு வகைகளைச் சாப்பிடுவது நல்லது. அசைவ உணவு சாப்பிடுவோர் முட்டை மற்றும் ஆட்டிறைச்சி சாப்பிட்டால் இந்த நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக மட்டுப்படும்.

சென்னையில் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ரீச் தொண்டு நிறுவனம் மூலம் காசநோய் ஒழிப்புக்காக பெரும்பணி செய்து வருகிறார்கள். நுரையீரல் காசநோய் மட்டுமே தும்மல் மூலம் பரவுகிறது உடலின் பிற உறுப்புகளில் வரக்கூடிய காசநோய் அவ்வாறு பரவுவதில்லை காசநோய் என்றவுடன் நுரையீரல் காசநோய் மட்டுமே நம் மக்களுக்குத் தெரியும். ஆனால் இரைப்பை குடல் குருதி சுழற்சி பாதை சிறுநீரகம் பாலுறுப்புகள் எலும்பு இவற்றிலும் இந்நோய் குடிகொள்ளும் என்பது பல பேருக்குத் தெரியாது. இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, நைஜீரியா, இந்தோனேசியா போன்ற 22 நாடுகளில் காசநோய் அதிகமாகப் பரவி உள்ளது. அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ஏ.மகிழ்மாறன் அவர்களின் கூற்றுப்படி மக்களுக்குச் சரியான விழிப்புணர்வு ஏற்படுத்திவிட்டால் இளம்பிள்ளை வாதம் ஒழிக்கப்பட்டது போல எய்ட்ஸ் நோய் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது போல காசநோயையும் எளிமையாகக் கட்டுப்படுத்த முடியும்.

தனி மரம் தோப்பாகாது, ஒரு கை தட்டினால் ஓசை வராது, ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதே இங்கே ஒவ்வொரு இந்தியனுக்கும் பாலபாடம். பொதுமக்களுக்குக் கொண்டு சேர்ப்பது நம்முடைய கடமை விழிப்புணர்வை ஏற்படுத்தினால் வெற்றிகொள்ள முடியாத நோய்கள் எதுவும் இப்பூமியில் இல்லை.

ஓலைக்குடிசையே ஓவியப் பிழையே
கொசுக்களின் நித்திரைக் குளிர் மாநாட்டில் வசிக்க இடம் தரும் வசந்தப் பந்தலே! என்று கவியரசு வைரமுத்து அவர்கள் சுகாதாரமற்ற பூமியை வருணனை செய்துள்ளார். அப்பூமியில் தான் நாமும் வாழ்ந்து வருகிறோம். தேங்கிக் கிடக்கின்ற நீர்தான் சாக்கடை என்றாகிறது; ஓடுகின்ற தண்ணீரில் அழுக்கு இருப்பதில்லை. எதையும் சாதிக்க நினைக்கும் இன்றைய இளைஞர்கள் களத்தில் இறங்கி விட்டால் முடியாது என்பது முட்டாள்களின் சரித்திரத்திலேயே என்றைக்கும் இருக்கும் வாருங்கள் தோழர்களே மக்கள் பணியாற்றுவோம்! நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று இவ்வுலகுக்குக் காட்டுவோம்!

கவிஞர் கல்லூரணி முத்து முருகன்.

தமிழ்த்துகள்

Blog Archive