கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, February 27, 2022

உலக மகளிர் நாள் சர்வதேச பெண்கள் தினம் - தமிழ்க் கட்டுரை, தமிழ்ப் பேச்சு world women's day tamil katturai speech essay

 

சர்வதேச பெண்கள் தினம்

அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்

நிச்சமும் பெண்பாற் குரிய என்ப என்கிறது தொல்காப்பியம். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று உலகப்பொதுமறை சொல்லி வைத்த பின்னரும் நம்மில் ஆண் பெண் என்ற பாகுபாடு இருக்கத்தான் செய்கிறது.

மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல

மாதவம் செய்திட வேண்டுமம்மா என்கிறார் கவிமணி.                       தமிழ்த்துகள்

இது பெண்களுக்கான காலம் என்ற அறைகூவல் எங்கும் கேட்கிறது உலகத்துக்கே பண்பாட்டையும் நாகரிகத்தையும் சொல்லித்தந்த தமிழர்கள் பெண்ணுரிமை தருவதில் முன்னோடியாகத் தான் இருந்திருக்கிறார்கள். சங்க இலக்கியப் புலவர்கள் 400 பேரில் 32 பேர் பெண்பாற் புலவர்கள், இது ஒன்றே தமிழினம் பெண்களுக்கு உரிய இடத்தை அப்போதே தந்திருக்கிறது என்பதற்கான சாட்சி.

இரண்டாம் நூற்றாண்டில் ஒளவைப் பாட்டியும் ஐந்தாம் நூற்றாண்டில் காரைக்கால் அம்மையாரும் எட்டாம் நூற்றாண்டில் ஆண்டாள் நாச்சியாரும் பக்தி இலக்கியத்தின் தூண்களாக இருந்திருக்கிறார்கள். அமெரிக்காவில் தொழில் புரட்சி ஏற்பட்டு இருந்த போது பெண்கள் நாளொன்றுக்கு 16 மணி நேரம் வேலை செய்ய வேண்டி இருந்தது. அதனைக் கண்டித்து நியூயார்க் நகரில் 1908 ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் நாள் ஒரு மிகப்பெரிய பேரணி 15 ஆயிரம் பெண்களோடு நடைபெற்றது. அன்று அமெரிக்க சோசலிஸ்ட் கட்சி இந்தப் பேரணியால் நிலைகுலைந்தது.

1909ஆம் ஆண்டு பிப்ரவரி 28ல் சர்வதேச பெண்கள் தினம் கொண்டாட அமெரிக்க சோசலிஸ்ட் கட்சி அனுமதி அளித்தது. இதே வேளையில் 1910ஆம் ஆண்டு ஹேகன் நகரில் அனைத்துலகப் பெண்கள் மாநாடு நடைபெற்றது. அதில் 17 நாடுகளைச் சார்ந்த 100 பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்விற்கு ஜெர்மனைச் சேர்ந்த ஆசிரியரும் சமூகப் புரட்சியாளருமான கிளாரா ஜெட்கின் தலைமை வகித்தார்.                         தமிழ்த்துகள்

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி நான்காவது ஞாயிறைப் பெண்கள் தினமாகக் கொண்டாடுவது என்று முடிவு செய்யப்பட்டபோது கிரிகோரியன் நாட்காட்டி அதனை மார்ச் 8 என்று காட்டியது அதிலிருந்து சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 8ஆம் நாள் உலகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இருந்தாலும் ஐநா பொதுச் சபை 1975ஆம் ஆண்டு தான் இதற்கு இசைவு அளித்தது.

சமத்துவத்தை யோசி, அறிவுபூர்வமாகக் கட்டி எழுப்பு, மாற்றத்திற்காக புதுமையாக சிந்தி என்ற முழக்கங்களோடு சர்வதேச பெண்கள் தினம் அங்கீகரிக்கப்பட்டது. 1917இல் ரஷ்யாவில் புரட்சி ஏற்பட்டது. அப்போது ரஷ்ய பெண்கள் போர் வேண்டாம், அமைதியும் ரொட்டியும் தான் தேவை என்று குரலெழுப்பி ஜார் மன்னரின் ஆட்சி வீழ்வதற்குக் காரணமாக இருந்தார்கள். இதுவும் சர்வதேச அளவில் பெண்கள் தினம் கொண்டாடுவதற்கு வழிவகுத்தது.

முதன்முதலாக ஆஸ்திரேலியா, டென்மார்க், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில்தான் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. 2011ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.                      தமிழ்த்துகள்

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பதை நம் இலக்கியங்கள் ஒருபுறம் வலியுறுத்தினாலும்" நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம், என்று புரட்சிப் பெண்ணில் பாரதியார் உரைத்த விழிப்புணர்வு பெண்ணடிமை காரணமாகவே இப்பண்புகள் வைக்கப்பட்டு இருக்கக்கூடும் என்ற கருத்துக்கு வழிவகுக்கிறது. மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்று இன்றைக்குப் பேசித் திரியும் பெண்கள் விடுதலைக்கு அன்றைக்கே பெரியாரும் பாரதியும் விதைத்த விதைகள் தான் காரணம்.

சிறியகட் பெறினே எமக்கு ஈயும் மன்னே

பெரிய கட் பெறினே யாம் பாடத் தான் மகிழ்ந்து என்ற வரிகள் மூலம் அக்காலத்திலேயே ஆண் பெண் நட்புக்கு ஔவையார் வழி வகுத்திருக்கிறார். ஆனால் இன்றைக்கோ அது கேள்விக்குறியாகி இருக்கிறது. பெண்ணை போகப் பொருளாய்ச் சித்தரித்து அவளுடைய பாதுகாப்புக்கு அச்சம் தரும் வகையில் ஒரு சமுதாயம் அமைந்துவிட்டால் அது வளர்ந்து விட்ட சமுதாயமா? என்ற கேள்வி எழுகிறது.               தமிழ்த்துகள்

பாலியல் வன்முறைகளைத் தடுப்பதற்கு போக்ஸோ போன்ற கடுமையான தடைச்சட்டங்கள் கொண்டு வந்த பிறகும் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம் என்ற நம் புலவர்களின் பாடல்கள் எல்லாம் படித்த பின் குப்பைத் தொட்டிக்குப் போய் விட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது.

வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார் என்று பெண்ணியம் பேசிய ஆண்பாற் புலவர்கள் இங்கு ஏராளம் ஏராளம்!     தமிழ்த்துகள்

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண் - என்று திருக்குறள் பெண்மையை மேன்மை செய்தாலும்ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே, சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே", என பெண் என்பவள் ஒரு பிள்ளை பெறக்கூடிய இயந்திரம் என்பது போல புறநானூறு பேசியிருக்கிறது.

சங்க இலக்கியங்கள் எங்கு பார்த்தாலும் வரைவின் மகளிர், பரத்தை என்றும் அவளைச் சித்தரித்து இருப்பதும் ஆண் பலரோடு பாலின உறவு முறை ஏற்று இருப்பதைப் பெண் தடுக்க இயலாது இருப்பதாகச் சொல்வதும் வியப்பாக இருக்கிறது. ஆணுக்குப் பெண் அடங்கியவள் என்றுதான் கூறுகிறது. சங்க காலத்துக்கு முந்தைய நிலையிலோ ஒரு பெண் தன் பாலியல் உறவுக்கு உரிய தலைமகனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்று இருந்திருக்கிறாள்.

சங்க காலத்திலும் கூட ஆண்கள் மடற் பனை ஏறுதல், அலர் அறிவுறுத்தல், பாங்கற் கூட்டம், பாங்கியர் கூட்டம் என்று தலைவியின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் நிலை இருந்திருக்கிறது. எட்டாம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் பெண்களின் நிலை போற்றுதற்கு உரியதாகத் தான் இருந்தது. ஆனால், அதன்பிறகு 1100 ஆண்டுகளாகப் பெண்களின் வாழ்வு "அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு? என்று பூட்டிவைத்த காலமாகவே இருந்தது. தமிழ்த்துகள்

அதன் பின்னால் ஏற்பட்ட புரட்சி தான் பெண்களைத் தற்போது

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் இப்

பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் இனி எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி என்று சொல்லும் அளவுக்கு அவர்களைப் பாரதியின் புதுமைப் பெண்களாக நடைபோடச் செய்திருக்கிறது.

இராமரின் வீரத்தைப் பற்றிப் பேசிய இராமாயணம் சீதையின் வல்லமையைச் சொல்லத் தவறி விட்டது. ஏன்? இராவணனின் நாட்டில் இருந்ததால் தன் கற்பை மெய்ப்பிக்கச் சிதையில் இறங்கச் சொன்னார்கள் சீதையை ஆனால் இராமனை அப்படியே விட்டது ஏன்? சிவதனுசுவை வளைத்து நாண் ஏற்றும் வலிமை பெற்றவன் இராமன் தன் இளம் வயதில் பந்தாடும் போது தவறி விழுந்த பந்தை எடுக்கச் சென்ற சீதை சிவதனுசை மிக எளிதாக நகர்த்தி வைத்துவிட்டுப் பந்தை எடுத்த நிகழ்வை ஏன் சொல்லவில்லை?

தமிழ்த்துகள்

பாஞ்சாலியைப் பஞ்சபூதங்களின் பிள்ளைகளுக்கு மனைவியாக்கியது மகாபாரதம், தசரதனுக்கு ஆயிரம் மனைவியர் அதில் மூவர் பட்டத்து அரசியர் என்று ஏன் சொன்னது? சீவக சிந்தாமணியில் சீவகன் அத்தனை பெண்களையும் மணம் முடிப்பதைக் காப்பியமாக வைத்தது சரியா?

செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும்

அறிவும் அருமையும் பெண்பாலன என்று தொல்காப்பியம் பெண்களுக்கு உரியனவாய் உரைத்ததை இந்தச் சமூகம் ஏன் மறைத்தது?

பெண்ணுக்குப் பெண்ணே எதிரி என்றும் மூடப் பழக்க வழக்கத்தையும் ஆண் வழிச் சமூகத்தையும் முன்னெடுக்கும் இச்சமுதாயம் தமிழ்ச் சமூகம் என்பது பெண்வழிச் சமூகம் என்பதை ஏன் மறந்து விட்டது?                                                 தமிழ்த்துகள்

ஊதி அணைத்து விட நாங்கள் ஒன்றும் அகல்விளக்குகள் அல்ல சூறாவளிக்கும் அணையாத சூரிய விளக்குகள் என்று பெண்கள் கூட்டம் இன்று வெகுண்டெழுந்து விட்டது. ஆம்! உலக அளவில் இயற்பியல்& வேதியல் என இரண்டு துறைகளுக்கும் நோபல் பரிசு பெற்ற மேரி கியூரி, பிரிட்டனின் முதல் பெண் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மார்கரெட் தாட்சர்,

இராணுவ செவிலியாகத் தன்னை இவ்வுலகுக்கு அடையாளப்படுத்திய பிளாரன்ஸ் நைட்டிங்கேல், ஏழு கடல்களில் நீந்தியவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான புலா சௌத்ரி, எவரும் எட்ட முடியாத எவரெஸ்ட் சிகரத்தில் 1984ஆம் ஆண்டு ஏறி கொடியை நாட்டிய உத்ரகாண்டைச் சார்ந்த பச்சேந்திரி பால், அண்டார்ட்டிக்கா விருதுபெற்ற அதிதி பந்த் மெர்ச்சண்ட் நவி கேப்டனாக கடற்படைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ராதிகா மேனன்.

செவாலியே விருது பெற்ற முதல் பெண் முனைவர் ஆஷா பாண்டே, தேசியப் பங்குச்சந்தைத் தலைமை இயக்குநராகப் பணியாற்றிய சித்ரா ராமகிருஷ்ணா, ஏவுகணை மனுஷி என்று எல்லோராலும் அழைக்கப்படும் கேரளாவின் டெஸ்ஸி தாமஸ், பத்மஸ்ரீ பெற்ற முதல் விளையாட்டு வீராங்கனை என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான ஆரதி சாகா, திருவாங்கூர் சமஸ்தானத்தின் முதல் பெண் சட்டப் பேரவை உறுப்பினரான மேரி பூணன்லோகோஸ், ஹங்கேரிக்கான முதல் இந்திய பெண் தூதர் கர்நாடகாவின் சிபி முத்தம்மா இன்னும் எத்தனை எத்தனை பேர் இத்தரணியில் கோலோச்சி இருக்கிறார்கள்.                                                                    தமிழ்த்துகள்

இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர் சுதேசா கிருபளானியை மறக்க முடியுமா? ஜான்சி ராணி லட்சுமிபாய்க்கு முன்னதாக சிவகங்கை மண்ணிலிருந்து வெள்ளையரை எதிர்த்த வீரமங்கை வேலு நாச்சியாரை மறக்க முடியுமா? கர்நாடகப் புரட்சி வேங்கை கிட்டூர் சின்னம்மாவை மறக்க முடியுமா? இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான சாவித்திரிபாய் பூலே, இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்பட்டமுதல் பெண் கவர்னர் சரோஜினி நாயுடு.

முதல் பெண் கேபினட் அமைச்சர் மற்றும் ஐநா பொது அவை முதல் பெண் தலைவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான விஜயலட்சுமி பண்டிட், கேரள உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பதவி ஏற்று பெண் குலத்துக்குப் பெருமை சேர்த்த நீதிபதி அன்னா சாண்டி, ஐந்து முறை உலக மகளிர் குத்துச்சண்டையில் தங்கப்பதக்கம் வென்ற மேரிகோம் லண்டன் ஒலிம்பிக்கில் அவர் வெண்கலப் பதக்கத்தை வாங்கியபோது மூன்று குழந்தைகளுக்குத் தாயான இவர் சாதித்து விட்டார் என்று கூறி தலை நிமிராத பெண்களும் தலை நிமிர்ந்தனர் அல்லவா?

இன்னும் எத்தனை எத்தனை பேர் இன்றைய நவீன இந்தியாவில்? அரசியல், பொருளாதாரம், மருத்துவம் பொறியியல், விண்வெளித்துறை என்று ஒவ்வொன்றிலும் கோலோச்சி வருகிறார்கள் தெரியுமா?                                                       தமிழ்த்துகள்

விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் ஒரு போதும் உறங்குவதில்லை. அன்று போனால் போகட்டும் பிப்ரவரி கடைசி ஞாயிற்றுக்கிழமை பெண்கள் தினத்தைக் கொண்டாடிக் கொள்ளட்டும் என்று சொன்ன சொல் இன்று கோடிக்கணக்கான பெண்கள் மார்ச் 8ஆம் நாள் சர்வதேச பெண்கள் தினத்தை எங்களுக்கான தினம் என்று உரிமையுடன் கொண்டாட வழிவகுத்துவிட்டது இத்தாலியில் மிமோசா பூக்களைப் பரிமாறிக்கொண்டு பெண்கள் தங்கள் தினத்தைக் கொண்டாடுகிறார்கள்.                                                      தமிழ்த்துகள்

உலகமெங்கும் பேரணிகளும் கருத்தரங்குகளும் நடக்கின்றன. நம் நாட்டிலும் சர்வதேச பெண்கள் தினம் ஒவ்வோர் ஆண்டும் கடைப்பிடிக்கப்படுகிறது. பெண் என்பவள் மென்மையானவள்; அன்பானவள்; அவள் அழுவதற்கு மட்டுமே பிறந்தவள் என்று இலக்கியங்களும் நாடகங்களும் படைப்புகளும் கூறினாலும்

பெண்ணுக்குள்ளே ஞானத்தை வைத்தான் புவி பேணி வளர்த்திடும் ஈசன் மண்ணுக்குள்ளே சிலமூடர் நல்ல மாதர் அறிவைக் கெடுத்தார்  - என்பதற்கு ஏற்ப பெண்ணினத்தைத் தன் காலடியில் போட்டு அவ்வப்போது இச்சமுதாயம் மிதித்து தான் வருகிறது. முளைக்க வேண்டும் என்று முடிவு கட்டிய விதை விருட்சம் ஆவது உறுதி.                                 தமிழ்த்துகள்

எதையும் தாங்கும் இதயம் எங்களுக்கு உண்டு என்று சானியா மிர்சா, பிவி சிந்து, கல்பனா சாவ்லா போன்ற வீரப்பெண்கள் கிளம்பிவிட்டார்கள். குழந்தை மணம் அறவே ஒழிக்கப்பட்டுவிட்டது. பலதார மணம் முடக்கப்பட்டு விட்டது. ஆண் ஆதிக்க சமூகம் தன் ஆயுளை விரல்விட்டு எண்ணிக் கொண்டிருக்கிறது.

இனி ஒரு விதி செய்வோம் அதை

எந்த நாளும் காப்போம் என்று போர்ப்பறை கொட்டிய பெண்கள் கூட்டம் இச்சமுதாயத்தில் நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் திமிர்ந்த ஞானச்செருக்கோடு உலாவி வருகிறது. இனியும் ஏமாறுவதற்கு நாங்கள் ஒன்றும் பதுமைகள் அல்ல பாரதியின் புதுமைகள் என்று கிளம்பி விட்டது ஒரு கூட்டம் மீண்டும் சமத்துவ வாழ்வை மீட்டெடுக்காமல் விடாது.

வீசினால் தென்றல்: கிளம்பினால் புயல் என்று புறப்பட்ட பின் யார்தான் தடுக்க முடியும்? புயலுக்குத் தலைவணங்க நாங்கள் ஒன்றும் புல்அல்ல! எதற்கும் அஞ்சாத இமயமலைகள் என்ற இடி முழக்கம் கேட்கிறது! இன்னொரு விடுதலை நோக்கிப் பெண்ணியம் முன்னேறி வருகிறது வரட்டும்! வெற்றிக்கொடி நாட்டட்டும்! பெண்மையைப் போற்றுவோம் பெருமையோடு வாழச் செய்வோம்.

 

-     கவிஞர் கல்லூரணி மு.முத்து முருகன்.                       தமிழ்த்துகள்

 

வாழ்த்துகளுடன்                   தமிழ்த்துகள்            WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

தமிழ்த்துகள்

Blog Archive