கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, August 24, 2021

பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 8 சிறுவினா விடை 10th TAMIL UNIT 8 SIRU VINA VIDAI SHORT QUESTIONS AND ANSWERS

 இயல் 8 சிறுவினா விடை            3 மதிப்பெண்கள்

1.சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக.

சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் 

அறத்தில் வணிக நோக்கம் இல்லாமை, அரசியல் அறம், அறங்கூறவையம், போர்அறம், பிறர் துன்பத்தையும் தன் துன்பமாகப்பார்த்தல், பசிப்பிணி மருத்துவம், வாய்மையே சிறந்த அறம்

மேற்கண்டவற்றை தமிழர் போற்றி வளர்த்த அறங்களாகச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன.  

இன்றைக்கும் தேவையே –

இப்பிறப்பில் அறம் செய்தால் மறு பிறப்பில் அதன் பயனைப் பெறலாம் என்ற வணிக நோக்கு கூடாது என்று புறநானூற்றில் முடமோசியார் கூறுகிறார். பிறரிடம் அன்பைப்பெற, ஆதரவைப்பெற, புகழ்ச்சியைப்பெற, கடவுளிடம் அருளைப்பெற என்று எண்ணிச் செய்வது அறமாகாது.

அறம் அறக்கண்ட நெறிமான் அவையம் என்கிறது புறநானூறு. மதுரையில் இருந்த அவையம் பற்றி மதுரைக்காஞ்சி கூறுகிறது. இவை இன்றைய நீதி மன்றங்களுக்கு ஒப்பானவை.

புறமுதுகிடுவோர், சிறார், முதியோர், பெண்டிர், நோயாளர் போன்றோருக்கு போரின்போது ஊறு செய்யக்கூடாது. இந்நிலை மறந்து இன்று மனித இனம் அணுஆயுதம் ஏந்தி நிற்கிறது. இது அறம் அன்று.

செல்வத்துப்பயனே ஈதல். எனவே பெருங்கொடையாளர்கள் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவி வருகின்றனர். பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்டோருக்கு உதவுகிறோம். இவ்விரக்க உணர்வு இருந்தால் மனிதநேயம் மலரும், பகை மாயும்.

பிழையறியா நன்மொழி என்கிறது நற்றிணை. வாய்மையே வெல்லும் என்ற சொல்லை நம் அரசு சின்னத்தில் வைத்துள்ளது. வாய்மையே சிறந்த அறம்.

2.ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக.

ஆசிரியப்பாவின் பொது இலக்கணம் –

§  அளவடிகளைப் (நான்கு சீர்) பெற்று வரும்.

§  இயற்சீர் (மாச்சீர், விளச்சீர்) பயின்றுவரும், பிறசீரும் வரும்.

§  மூன்று அடி முதல் எழுதுபவர் மனநிலைக்கு ஏற்ப அடிகள் அமையும்.

§  ஆசிரியத்தளை மிகுதியாக வரும், வெண்டளை, கலித்தளை விரவியும் வரும்.

§  ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடித்தல் சிறப்பு.

§  அகவல் ஓசை பெற்று வரும்.

3.சுற்றுச்சூழலைப் பேணுவதே இன்றைய அறம் என்ற தலைப்பில், பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்பு ஒன்றை உருவாக்குக. குறிப்பு - சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கச் சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும், ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஏற்படும் மாற்றமே சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும்.

சுற்றுச்சூழலைப் பேணுவதே இன்றைய அறம் – உரைக்குறிப்பு

நிலம், நீர், காற்று, ஒலி, விண்வெளி மாசு, மட்கும், மட்காக்குப்பைக் கழிவுகள், இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள். சுத்தம் தெய்வீகத்திற்கு அடுத்தபடியாகும். கழிவுநீர் தேக்கம், கொசுக்களின் உற்பத்தி, ஆலைக்கழிவுநீர் சுத்திகரிப்பு, தொற்று நோய்கள் பரவல், தொழிற்சாலை, வாகனப்புகை, பட்டாசு வெடித்தல், வாகன, தொழிற்சாலைகளின் இரைச்சல். மனிதனின் சுயநலம், பசுமை இல்ல விளைவு, உயிர்க்கோளமாக நீடிக்க இயற்கை அழித்தல் தடுப்பு, மரங்கள் இயற்கைத் தூய்மையாக்கிகள், உயிர்வளி உற்பத்தி. சுத்தம் உள்ள இடமெங்கும் சுகமும் உண்டு நீ இதனை நித்த நித்தம் பேணுவையேல் நீண்ட ஆயுள் பெறுவாயே – கவிமணி.

விண்கலம், செயற்கைக்கோள்கள் ஏவல், விண்வெளிக்குப்பைகள் – புவி வெப்பமயமாகும் ஆபத்து.

4) வாளித் தண்ணீர், சாயக் குவளை, கந்தைத் துணி, கட்டைத் தூரிகை இச்சொற்களைத் தொடர்புபடுத்தி ஒரு பத்தி அமைக்க.

                 நாங்கள் வசிக்கும் ஊரில் ஒரு பழம் பெருமையான அரசர்கள் வாழ்ந்த அரண்மனை ஒன்று இருந்தது . அவ்வரண்மனை உயரமான அழகிய கட்டடங்கள் நிறைந்ததாக இருந்தது . ஆனால் அறைகள் மிகவும் அழுக்காகவும் சுவர்களில் ஒட்டடை நிறைந்ததாகவும் காணப்பட்டது. எனவே நானும் என் நண்பர்களும் எங்கள் ஊரில் உள்ள அரண்மனையைச் சுத்தமாக வைக்க எண்ணினோம் . வாளியில் தண்ணீர் எடுத்து வந்து அறைகளைச் சுத்தம் செய்தோம். சுவர்களில் இருந்த அழுக்கைப் போக்க குவளையில் சாயம் கொண்டு வந்து சுவரினை அழகுபடுத்தினோம் .

             கந்தைத்துணியை எடுத்து வந்து நாங்கள் அனைவரும் அறைகளில் உள்ள சன்னல்களையும், கதவுகளையும் சுத்தமாகத் துடைத்தோம். கட்டைத்தூரிகையை வைத்து சுவர்களில் உள்ள ஒட்டடைகளை அடித்து சுத்தம் செய்தோம். எங்கள் பணியினைக் கண்ட ஊர்த்தலைவர் எங்களைப் பாராட்டி இனிப்புகள் வழங்கினார்.

தமிழ்த்துகள்

Blog Archive